கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக கடந்த ஆகஸ்ட் 11-ம் திகதி முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது. ஆனால், அதன் பாதுகாப்பு அம்சம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மருந்தின் மீதான நம்பகத் தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய ஜனாதிபதி புதின்.
எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இந்நிலையில், ஸ்புட்னிக்-V தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கோவிட் 19-க்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக்-V வின் முதல் தொகுப்பு சிவில் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.
தேவையான தகுதி சோதனைகள் வெற்றி பெற்றதையடுத்து பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிராந்திய பகுதிகளுக்கு விரைவில் இந்த மருந்துகளின் முதல் தொகுப்பு கிடைத்துவிடும் என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment