வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து விஷேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த சிலாபம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று (11) இரவு தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்றையதினம் சனிக்கிழமை (12) மாலை மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து மாலை 6.30 மணியளவில் சௌத்பார் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில், கடந்த வாரம் கட்டார் நாட்டிலிருந்து விஷேட விமானத்தில் அழைத்து வரப்பட்டிருந்த 36 வயதுடய சிலாபம் மாதம்பே பகுதியைச் சேர்ந்த விஜித ருவன் குணவர்தன எனும் நபரே இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலைய தகவல்கள் தெரிவித்தன.
குறித்த விமானத்தில் அழைத்து வரப்பட்ட பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனைகளுக்காக குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே குறித்த நபர் அங்கிருந்து நேற்று இரவு தப்பி ஓடியுள்ளதாகவும் குறித்த நபரை கைது செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறும் குறித்த நபரின் பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில் தப்பியோடியுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அந்நபரை மீண்டும் வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த வாரம் குறித்த பெரியகாடு இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருவருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனையில் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment