புற்று நோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் அடாவடி - நோயாளிகள் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரிடம் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

புற்று நோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் அடாவடி - நோயாளிகள் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரிடம் முறைப்பாடு

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமை புரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்று நோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இன்றையதினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்த ராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர். 

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நாடு பூராகவும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக குறித்த உத்தியோகத்தர்கள் கடமை புரிவது இல்லை, எனினும் புற்று நோய் இனங்காணப்பட்ட நோயாளிக்கு குறித்த கதிரியக்க சிகிச்சை அளிக்காவிடில் மீண்டும் புற்று நோய் பரவும் நிலை காணப்படுகின்ற நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக புற்று நோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை குறித்த உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு திருப்பி அனுப்புகின்றனர். 

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மட்டுமே புற்று நோய்க்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக காணப்படுகின்றது. மட்டக்களப்பு திருகோணமலை, வவுனியா, மன்னார் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் புற்று நோய் சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்களை குறித்த உத்தியோகத்தர்கள் தங்களால் சிகிச்சை வழங்க முடியாது நாங்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுகிறோம் எனக் கூறி அடாவடியாக திருப்பி அனுப்புகின்ற நிலை காணப்படுகிறது. 

எனினும் குறித்த உத்தியோகத்தர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்காது மேலதிக நேர கொடுப்பனவினை கடந்த இரண்டு மாதங்களாக பெற்றிருப்பதாக வைத்தியசாலை நிர்வாகத்தினரால் சுட்டிக்காட்டப்படுகிறது. 

எனவே இன்றையதினம் புற்று நோய் சிகிச்சைக்கு சென்று திருப்பி அனுப்பப்பட்ட 5 நோயாளிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்த ராஜாவை சந்தித்து தமது குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்கள். 

இது தொடர்பில் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறித்த விடயம் தொடர்பில் தமக்கு பல்வேறுபட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளது இது தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்திருக்கிறோம். 

நேற்றைய தினம் கூட குறித்த தொழிற்சங்கத்தினருடன் கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம் எனினும் அவர்கள் உடன்படுவதாக இல்லை எனினும் விரைவில் இந்த குறித்த உத்தியோகத்தர்கள் 8 பேருக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

கடந்த இரண்டு மாதங்களாக அந்த எட்டு உத்தியோகத்தர்களும் மேலதிக கொடுப்பனவை பெற்றமை சம்பந்தமாக அதனை மீள் பரிசீலனை செய்வதற்கான அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை 20 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் அங்கேயுள்ள வைத்திய நிபுணர்களினாலேயே குறித்த உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். 

எனினும் இனிவரும் காலத்தில் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இனிமேலும் பாதிக்கப்படாத வண்ணம் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி

No comments:

Post a Comment