காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரான மதியுகராஜாவையும், வாக்களித்த கண்டி மக்களையும் வழமைபோல் இம்முறையும் வஞ்சகமான முறையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏமாற்றியுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் உடபளாத்த பிரதேச சபை உறுப்பினர் கனகரட்னம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று (09.08.2020) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முகவராகவே காங்கிரஸின் வேட்பாளர் கண்டியில் களமிறக்கப்பட்டார். கணிசமானளவு வாக்குகளைப் பெற்று, கண்டி மாவட்டத்துக்கான தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதே இதன் பிரதான நோக்கம்.
கொரோனா பிரச்சினையின்போதுகூட கண்டி மாவட்ட மக்களை கண்டுகொள்ளதா காங்கிரஸ் உறுப்பினர்கள், தேர்தலுக்காக அவசர அவசரமாக நாடகங்களை அரங்கேற்றி, அரசியல் கைக்கூலிகளை சம்பளத்துக்கு அமர்த்தி மக்கள் மத்தியில் போலியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக கண்டி மாவட்டத்தில் கணிசமானளவு வாக்குகள் கிடைத்தால் தேசியப்பட்டியலொன்று கிடைக்கும் எனவும், அந்த வாய்ப்பு துரைமதியுகராஜாவுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதனை நம்பி மதியுகராஜாவின் ஆதரவாளர்கள் வாக்களித்தனர். மதியுகராஜாவுக்காக வாக்களித்தனரே தவிர போட்டியிட்ட வேட்பாளருக்கு வழங்கவில்லை. சில வாக்குகள்கூட வஞ்சகமான முறையிலேயே பெறப்பட்டுள்ளது.
ஆனால், காங்கிரசுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படவில்லை. திட்டமிட்ட அடிப்படையில் மதியுகராஜாவும், வாக்களித்த கண்டி மாவட்ட மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
எனவே, காங்கிரஸின் வஞ்சகமான அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். போலி உறுதிமொழிகளை நம்பி அந்த பக்கம் சென்றவர்கள், உண்மையை புரிந்துகொண்டு கண்டி மண்ணின் அடையாளம் காப்பதற்காக எம்முடன் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்." - என்றுள்ளது.
No comments:
Post a Comment