(நா.தனுஜா)
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கான பதிலைப் பெற்றுக் கொடுப்பதற்கு காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவையாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் அமெரிக்கா, அத்தகைய கட்டமைப்புக்களை வலுப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை சர்வதேச காணாமல் போனோர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்களுடனான தமது ஒருமைப்பாட்டை இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் வெளிப்படுத்தியிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றிலேயே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
வலிந்து காணாமலாக்கப்படும் சம்பவங்களை முடிவிற்கு கொண்டு வருவது மாத்திரம் போதுமானதல்ல. மாறாக தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காக காத்திருக்கும் குடும்பங்களுக்கு பதில் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அமெரிக்கத் தூதுவர், இந்தக் குடும்பங்களை முன்நிறுத்தி காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தற்போதும் எதிர்காலத்திலும் மிகவும் முக்கியமானவையாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதேவேளை, காணாமல் போனோரின் அறியப்படாத தலைவிதியை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும் என்று இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ரன்ஜா கொக்ரிஜ்ப் வலியுறுத்தியிருக்கிறார்.
No comments:
Post a Comment