(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் குறித்து பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேபோன்று வெகுவிரைவில் கம்பனிகளுடனும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். வழமையைப்போன்று பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்காமல் ஒரே முறையில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானுடைய 107 ஆவது ஜனன தின அனுஷ்டிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் பாரிய கடன் தொகை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறது. அவற்றை செலுத்திய பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்க முடியும். அதுவரையில் முழுமை பெறாத வீடுகளை முழுமையாக நிர்மாணித்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மலையகத்தில் தொழில் பேட்களை அமைப்பது குறித்து உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டு வருகிறது. பிரதானமாக சிறு கைத்தொழில் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் இவை அமைக்கப்படும். இதற்கான பரிந்துரை தற்போது தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய 1000 ரூபா சம்பள பிரச்சினை தொடர்பில் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அத்தோடு வெகுவிரைவில் கம்பனிகளுடனும் பேச எதிர்பார்த்துள்ளோம்.
இம்முறை பேச்சுவார்த்தைகள் வழமையைப்போன்று இழுத்தடிக்கப்படமாட்டாது. ஒரேயொரு பேச்சுவார்த்தை மாத்திரமே முன்னெடுக்கப்படும். அது சுமூகமானதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம்.
மலையகத்திலிலுள்ள பெருமளவான தோட்டங்கள் பராமறிப்பின்றி காடுகளாவதனாலேயே சிறுத்தைகள் தொல்லை ஏற்பட்டுள்ளது. சுமார் 4000 ஏக்கரில் மாத்திரமே மீள் பயிர்ச் செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீள் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டால் மாத்திரமே குறித்த நிலப்பகுதி காடாகுவதைத் தவிர்க்க முடியும். ஆனால் கம்பனிகள் அதனை முறையாக முன்னெடுக்கவில்லை. இதேபோன்று சிறு சிறு குறைபாடுகள் பல உள்ளன. இந்த விடயங்களும் கம்பனிகளுடனான பேச்சுவார்த்தையின் போது கவனத்தில் கொள்ளப்படும்.
பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பிட்டளவு கொழுந்து பறிக்கப்படாவிட்டால் முழு நாள் தொழில் செய்தாலும் அரை நாளுக்குரிய சம்பளமே வழங்கப்படுகிறது. இவ்வாறான பிரச்சினைகள் காணப்படும் பிரதேசத்திலுள்ள மக்களை எமது தொழிற்சங்கத்தில் வந்து தெரியப்படுத்துமாறு அறிவித்திருக்கின்றோம். இந்த பிரச்சினைக்கு நாம் நிச்சயம் தீர்வினைப் பெற்றுக் கொடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment