கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
பிரபல பொலிவூட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 11ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மும்பையில் உள்ள நானாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவுகள் கடந்த 12ஆம் திகதி வெளியாகின. இதில் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.
ஆனால், அபிஷேக் பச்சனின் மனைவியும் பிரபல பொலிவூட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், பொலிவூட் நடிகை ஜஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆரத்யாவும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். ஆனால், கடந்த 18ஆம் திகதி அதிகாலை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால், இருவரும் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் சிகிச்சை பெற்று வந்த நானாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகி்ச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யாவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், அபிஷேக் பச்சன் தனது ட்வீற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் தனக்கும், தந்தை அமிதாப் பச்சனும் இன்னும் கொரோனாவிலிருந்து குணமடையாததால், தொடர்ந்து வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும், குடும்பத்தினர் கொரோனாவிலிருந்து குணமடைய தொடர்ந்து பிரார்த்தனை செய்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அபிஷேக் பச்சன் தனது ட்வீற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனாவிலிருந்து குணமடைந்த ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆரத்யாவும் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
No comments:
Post a Comment