முஸ்லிம் மக்கள் எம்மை நம்பினால் ஆதரவை தாருங்கள், முஸ்லிம் சமூகத்தை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் என்கிறார் சம்பந்தன் - News View

About Us

About Us

Breaking

Friday, July 31, 2020

முஸ்லிம் மக்கள் எம்மை நம்பினால் ஆதரவை தாருங்கள், முஸ்லிம் சமூகத்தை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் என்கிறார் சம்பந்தன்

மிக மோசமான பாதிப்பு ...
(ஆர்.யசி)

முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம்களுக்காக சிந்திக்காது தமது பதவிகள் குறித்து மட்டுமே சிந்திக்கின்றனர். ஆனால் நாம் தமிழ் முஸ்லிம் மக்கள் குறித்து சிந்திக்கிறோம். முஸ்லிம் மக்கள் எம்மை நம்பினால் எமக்கான ஆதரவை தாருங்கள், முஸ்லிம் சமூகத்தை ஒருபோதும் நாம் ஏமாற்ற மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

புல்மோட்டை வட்டார தமிழரசு கட்சியின் கிளைத் தலைவர் கலீல் தலைமையில் புல்மோட்டையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், சிறுபான்மை மக்கள் மிகவும் பிரச்சினைக்குரிய காலத்தில் வாழ்கின்றோம், எமக்கு எதிராக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு தமிழர் பிரதேசங்களை கைப்பற்றுவதற்கும் மாற்றியமைக்கவும் பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விடயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரம் எம்மிடம் இருந்தால் மட்டுமே இந்த சதிகளை முறியடிக்க முடியும். தொல்பொருள் என்ற பெயரில் கிழக்கில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் மிக மோசமான பாதிப்பு முஸ்லிம் மக்களுக்கே ஏற்பட்டு வருகின்றது. முஸ்லிம்களின் நிலைமைகள் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிந்திக்கின்றது. முஸ்லிம்கள் நினைத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு தாருங்கள். முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம்களுக்கான சிந்திக்காது அவர்களின் பதவிகள் குறித்து மட்டுமே சிந்திக்கின்றனர். ஆனால் நாம் மக்கள் குறித்து சிந்திக்கிறோம். 

சமூகங்களுக்கு இடையில் புரிந்துணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம் மக்களுக்காக நாம் கிழக்கின் முதலமைச்சர் பதவியைக்கூட விட்டுக் கொடுத்தோம். சமூக நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் நாம் அந்த விட்டுக் கொடுப்பை முன்னெடுத்தோம். இந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயற்பட வேண்டும்.

இந்த நாட்டில் தீர்வு குறித்து பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றன. யுத்தம் ஒன்று இடம்பெற்றது, அதற்கு முன்னரும் பின்னரும் பேச்சுவார்த்தைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஆரம்பத்தில் இருந்து நாம் மட்டுமே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். நாம் தேர்தலுக்காக மட்டும் செயற்படும் கட்சி அல்ல. 

இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஏற்ற அதிகார பகிர்வு வழங்கப்பட்டு அரசியல் அமைப்பில் நிலையான தீர்வு ஒன்றினை உருவாகிக்கொடுக்க வேண்டும். அதனை அடைவதற்கான வாய்ப்புகள் இன்று நெருங்கிக்கொண்டு உள்ளது. 

அதேபோல் மக்களின் தீர்மானம் இந்த தேர்தலில் வெளிப்பட்டாக வேண்டும். பாராளுமன்றத்தில் நாம் பலமான அணியாக இருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாடு பூராகவும் நாம் சிறுபான்மை மக்களாக இருந்தாலும் கூட வடக்கிலும், கிழக்கிலும் நாம்தான் பெரும்பான்மையாக வாழ்கின்றோம். எனவே நாம் இரு சமூகமும் ஒற்றுமையாக செயற்பட்டால் எமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment