உரிமையைப் பெற்றுத் தருவதற்கான உத்தரவாதத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே வழங்க முடியும் - முன்னாள் அரசாங்க அதிபர் எம். உதயகுமார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 28, 2020

உரிமையைப் பெற்றுத் தருவதற்கான உத்தரவாதத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே வழங்க முடியும் - முன்னாள் அரசாங்க அதிபர் எம். உதயகுமார்

மட்டக்களப்பில் தேர்தல் தொடர்பான ...
ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழ் சமூகத்தின் உரிமையைப் பெற்றுத் தருவதற்கான உத்தரவாதத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மாத்திரமே வழங்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை 28.07.2020 இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு ஆதரவாளர்கள் மத்தியில் மேலும் உரையாற்றுகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தினை எப்படியாவது குறைத்து இதனூடாக தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை மளுங்கடிப்புச் செய்வதற்கு இந்தத் தேர்தலினை ஒரு கருவியாக பயன்படுத்த சிங்கள பௌத்த பேரினவாத அரசு நினைக்கின்றது.

இதற்கான நீண்ட காலத் திட்டமிடல் ஒழுங்கமைப்பு நடவடிக்கையின் ஒரு அங்கம்தான் எமக்கு எதிராக களமிறக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலும் அதில் உள்ள வேட்பாளர்களும்.

தற்போதைய அரசியல் கள நிலவரங்களையும் தமிழர்சார் அரசின் கொள்கைகளையும் ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த கட்சிகள் சில பல மாயையான தோற்றப்பாடுகளை நம் இளைஞர்கள் மத்தியில் தோற்றுவித்து அவர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் இந்த ஏமாற்று வித்தைகளை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நாட்டிலே சிங்கள பேரினவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் தனது உரிமையைப் பெறுவதற்காக 70 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றோம் எமது போராட்டத்தின் வடிவங்கள்தான் மாறிக்கொண்டு செல்கின்றதே தவிர அவை மளுங்கடிக்கப்படவில்லை எமக்கான உரிமை கிடைக்கும் வரை அவை தொடர்ந்துகொண்டுதான் செல்கின்றது.

எமது இந்த உரிமைப் போராட்டத்தினை மளுங்கடிப்பதற்கு பல உத்திகளை இந்த சிங்கள பேரினவாத அரசுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்திருப்பதனை நாம் காணலாம். 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ் மக்கள் இனி தமது உரிமைக்காக போராட மாட்டார்கள் இனி அவர்கள் எமது அடிமைகள்தான் என பேரினவாத அரசுகள் நினைத்திருந்தன.

ஆனால் அத்தகைய எண்ணம் கொண்டிருந்த பேரினவாத அரசுக்கு அப்போது நடைபெற்ற தேர்தலின் மூலமாக தமிழ் மக்கள் இன்னும் தமது உரிமையினைப் பெறுவதற்காக போராடுகிறார்கள் என்பதனை தமிழ் சமூகம் நிரூபித்திருந்தது.

ஆனால், போராட்டமானது ஆயுத போராட்டமாக அல்ல அது ஒரு அரசியல் போராட்டமாக மாறி வேறொரு பரிணாமத்தினைப் பெற்றுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஆணையிட்டு வாக்களித்து வந்துள்ளதை நாம் அறிவோம்.

த.தே.கூட்டமைப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் போடுகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் எமது போராட்டத்தினை நலிவடையச் செய்து எம்மையே அழிப்பதற்றான ஆணையினை நாமே வழங்குகின்ற ஒரு துர்ப்பாக்கிய செயற்பாடாக அது அமையும் என்பதனை மறந்துவிடாதீர்கள் ஆகையால் சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்;து எமக்கு ஆணையிட்டு எமது உரிமை கிடைக்கும்வரை போராடுவதற்கு எம்முடன் தொடர்ந்தும் பயணியுங்கள் வெற்றி எமதே” என்றாரவர்.

No comments:

Post a Comment