ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பில் வாவியும் கடலும் கலக்கும் கழிமுகமான முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள மணல் திட்டுக்களை வெட்டி அகற்றுவதால் மட்டக்களப்பு வாவிக் கரையோரப் பிரதேசங்கள் எதிர்கொள்ள நேரிடும் பாதிப்புக்கள் குறித்து அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான விசேட அவசர கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 28.06.2020 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் கலாமதி பத்தமராஜா தலைமையில் இடம்பெற்றது.
ஆற்றுவாயை வெட்ட விடுக்கப்படும் கோரிக்கையால் மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தெளிவு படுத்தப்பட்டது.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை 27.06.2020 இரவு மட்டக்களப்பு வாவியையும் கடலையும் இணைக்கும் முகத்துவாரம் கழிமுக நீர் வழிந்தோடும் பகுதி இரவோடிரவாக சிலரால் வெட்டி அகற்றப்பட்டதால் அவ்விடத்தில் பிரதேச வாசிகளுக்கும் முகத்துவார கழிமுகத்தை வெட்டுவதில் ஈடுபட்ட சிலருக்குமிடையில் பதற்றநிலை ஏற்பட்டு இருவர் காயமடைந்ததோடு 33 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுமிருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் கரைவாகுப்பற்று நற்பிட்டிமுனை கிட்டங்கி நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது செய்கை நிலங்கள் முழுமையாக வாவிப் பெருக்கு நீரினால் பாதிக்கப்படுவதால் அதனை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அவ்வேண்டுகோள் சனிக்கிழமை பகல் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது முகத்துவாரம் வெட்டி அகற்றப்பட முடியாது என தீர்மானம் எடுத்திருந்த நிலையில் இந்தச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மீண்டும் இந்த விடயங்கள் பற்றி கலந்துரையாட விசேட சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை மீன்பிடிர் திணைக்களம் இடர்முகாமைத்துவ பிரிவு சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் நன்னீர் மீனவர் சங்கங்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த விசேட கூட்டத்தில் இடர் முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் ஏ.சி.எம்.சியாட் கருத்து வெளியிடுகையில் தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வறட்சியான சூழ்நிலை காரணமாக ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் வவுசர்கள் மூலம் 32 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் முகத்துவார கழிமுகம் தறிந்து விடப்பட்டால் ஒட்டு மொத்த மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றார்.
மீன்பிடி திணைக்கள அதிகாரிகளும் மீனவர் சங்க பிரதிநிதிகளும் கருத்து வெளியிடுகையில் ஆற்றுவாய் கழிமுகம் திறந்து விடப்பட்டால் மட்டக்களப்பு வாவியை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட சந்தர்ப்பம் உருவாகும் எனக்குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment