வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே பாராளுமன்றுக்கு அனுப்புங்கள் என உலக பாராளுமன்ற நாளில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக பாராளுமன்ற தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது இன்று உலக பாராளுமன்ற தினம் (The International Day of Parliamentarism). அடுத்த பாராளுமன்றத்தைத் தேரிவு செய்வதற்காக எமது மக்கள் தயாராகிவரும் சூழலில் இந்த நாள் வந்திருக்கின்றது.
பாராளுமன்றத்தில் தன்னைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவர் - கொடுத்த வாக்குறுதிகளை நிறவேற்றியே தீரும் சித்தம் கொண்டவராகவும், நிறைவை நோக்கிய உயரிய செயற்திறன் மிக்கவராகவும், மக்களுக்கு உண்மையாக இருந்து சமூக நேயத்துடன் பணியாற்றும் பண்பைக் கொண்டவராகவும் திகழ வேண்டும் என்பதுவே - ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் குடிமகளதும் எதிர்பார்ப்பு ஆகும்.
அறவே நிறைவேற்ற முடியாத திட்டங்களையெல்லாம் தமது இலக்குகளாகக் காண்பித்து, தம்மை நம்புகின்ற மக்களை எந்தக் கூச்சமும் இன்றி எப்போதும் ஏமாற்றுகின்ற சாதாரண அரசியல் வாதிகளுக்கு மத்தியில் நடைமுறைச் சாத்தியமானவற்றை மட்டுமே தமது கொள்கையாக வைத்து, தேர்தலுக்குப் பின்னர் நிறைவேற்றக் கூடியவைகளை மட்டுமே தேர்தலுக்கு முன்னைய வாக்குறுதிகளாக வழங்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்ட உண்மையான மக்கள் பணியாளர்களை அடுத்து வருகின்ற ஒரு மாத காலத்துக்குள் நீங்கள் இனங்காண வேண்டும் என்றும்,
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அத்தகைய உயரிய அரசியல் பண்பைத் தமது இயல்பாகக் கொண்டவர்களையே உங்களது பிரதிநிதிகளாக நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் நான் உங்களைப் பணிவோடு வேண்டிக் கொள்ளுகின்றேன்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய நாம் முன்வைப்பவை - வாக்குகளுக்கான வெறும் வாக்குறுதிகள் அல்ல நிறைவேற்றி முடிப்பதற்கான செயற்திட்டங்களே என்றும் ஆவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment