மாகாண சபைகள் முறையை ஒழிப்பது பற்றி அரசியல் கட்சிகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்கிறார் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட.
13 ஆம் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் மாகாண சபை முறையை ஒழிக்க முடியும் என்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் தமது கருத்தைச் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
மாகாண சபைகள் முறையை ஒழிப்பது தொடர்பான 14 ஆவது நிலைப்பாட்டை எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தமது கொள்கைப் பிரசாரத்தில் உள்ளடக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு உதவும் வகையில் மாகாணங்களுக்கு மேலதிக அதிகாரத்தை வழங்கும் நோக்குடன் 1987 இல் 13ஆம் திருத்தச் சட்டம் வகுக்கப்பட்டது என்று கூறும் மிலிந்த மொரகொட, ஆனால் அது மிகையான, அதிக செலவுடன் சுமையான மற்றும் பயனற்ற ஒன்றாக மாறியது.
இதற்கு பதிலாக செனட் அல்லது மேல் சபையை உருவாக்கியிருந்தால் அது மத, இன பிராந்தியங்கள் சபை தன்மையில் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை வழங்கியிருக்கும் என்று குறிப்பிடுகிறார்.
அதேநேரம் இலங்கையில் உள்ள 9 மாகாண சபைகளும் தற்போது கலைக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் செயற்படாமல் இருப்பதையும் மிலிந்த மொரகொட கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
சப்ரகமுவ மாகாண சபை 2018 செப்டம்பர் 26 ஆம் திகதி, கிழக்கு மாகாண சபை 2018 செப்டம்பர் 30, வடமத்திய மாகாண சபை 2018 அக்டோபர் 1, மத்திய மாகாண சபை 2018 அக்டோபர் 8, வடமேற்கு மாகாண சபை 2018 அக்டோபர் 10, வட மாகாண சபை 2018 அகடோபர் 25, தென்மாகாண சபை 2019 ஏப்ரல் 19, மேல் மாகாண சபை 2019 ஏப்ரல் 21, ஊவா மாகாண சபை 2019 செப்டம்பர் 8 ஆகிய திகதிகளில் கலைக்கப்பட்டு தற்போது செயற்படாத நிலையில் உள்ளது.
இதேவேளை மாகாண சபைகளுக்கு வருடாந்தம் 250 பில்லியன் ரூபா செலவாகிறது. இவற்றை ஒழிப்பதன் மூலம் மிச்சமாகும் நிதியை வேறு செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்று மிலிந்த மொரகொட குறிப்பிட்டுச் சொல்கிறார்.
No comments:
Post a Comment