(இராஜதுரை ஹஷான்)
மனித படுகொலை கலாச்சாரத்தை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் ஆகியோரே நாட்டில் அறிமுகம் செய்தார்கள். ரணசிங்க பிரேமதாஸ விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என்பதை ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டமை மகிழ்ச்சிக்குரியது. இவரது கருத்து சர்வதேச அரங்கிலும் தாக்கம் செலுத்தும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பெலியத்த - பலபொல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சியின் நெருக்கடி மற்றும் உள்ளக பிரச்சினை குறித்து நாட்டு மக்களும், ஆளும் தரப்பினரும் அக்கறை கொள்ளவில்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான கட்சியில் அதிக செல்வாக்கு உள்ளது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட போது மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல் மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
அரசாங்கத்தை கைப்பற்றுவதை விடுத்து, இரண்டு தரப்பினரும் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இரு தரப்பில் ஒரு தரப்பு நிச்சயம் சிறிகொத்தாவையும், பிறிதொரு தரப்பு ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தையும் கைப்பற்றும்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆயுதம் வழங்கினார் என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் பகிரங்கமாக குறிப்பிடுகிறார். ரணசிங்க பிரேமதாஸ தெற்கிலும் அக்காலக்கட்டத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்தார்.
தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியினர் 60000 ஆயிரம் இளைஞர் யுவதிகளை படுகொலை செய்தார்கள். அன்றும் மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய தேசிய கட்சியின் கருத்தையே நிறைவேற்றியது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேதமாஸ விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என்பதை ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார். இவரது கருத்து சர்வதேச நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment