பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மிருகக்காட்சிசாலையில் பல வருடமாக வேதனையை அனுபவித்து வந்த காவன் என்ற யானையை விடுவிக்க பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் 21 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது.
காவனை உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அது எங்கிருந்து வந்ததோ, அங்குள்ள (இலங்கை) அதிகாரிகளிடம் பேசி, காவனிற்கு பொருத்தமான வசிப்பிடத்தை அடையாளம் காண நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த 30 நாட்களிற்குள் இதை நடைமுறைப்படுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவன் யானை தனது ஒரு வயதில் இலங்கையிலிருந்து பாகிஸ்தானிற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. யானைகள் இல்லாத நாடான பாகிஸ்தானிற்கு இலங்கை 1985 ஆம் ஆண்டு ஒரு வயதான காவன் என்ற யானையை அன்பளிப்பு செய்தது.
பின்னர் 1990 இல் அதற்கு துணையாக சஹோலி என்ற பெண் யானையையும் இலங்கை அன்பளிப்பு செய்தது. 2012ஆம் ஆண்டு சஹோலி என்ற பெண் யானை உயிரிழந்தது. அதன் பின்னர் காவன் தனிமையில் இருந்தது.
ஆசிய யானைகள் மிதவெப்பமான பகுதிகளில் வாழும் நிலையில், மிருகக்காட்சிசாலையில் காவன் மோசமான சூழலில் வசித்தது. சுமார் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் அது வசித்தது. தனிமையில் வசிப்பதால் விரக்தியில் இருந்த அந்த யானை குழப்பத்தில் ஈடுபட்டதாக 2015 இல் குறிப்பிட்டு சங்கிலியால் அது பிணைக்கப்பட்டது.
இதை அறிந்த, அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகையும், பொப் பாடகியுமான செர், காவன் யானையை சங்கிலியில் இருந்து விடுவித்து, சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்றும், காவனுக்குத் துணையாக பெண் யானை ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
உலகளவில் அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார். அவரது முயற்சியால் உலகம் முழுவதும் 200,000 க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்ட மனு பாகிஸ்தானிடம் கையளிக்கப்பட்டது. இந்நிலையில், காவனை விடுவிக்க கோரியமைக்கு செர், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு தனது நன்றியை செய்துள்ளார்.
No comments:
Post a Comment