(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது இருப்பிடங்கலுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் இரண்டாம் கட்டமாக 600 பேர் வரை இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
23 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
ஏற்கனவே முதல் கட்டமாக மேல் மாகாணத்தின் களனி பொலிஸ் பிரிவில் இவ்வாறு சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த 370 பேர் கடந்த சனிக்கிழமை 2 ஆம் திகதி பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பட்டனர்.
இந்நிலையில் மேல் மாகாண ஆளுநர், மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ரொஷான் குணதிலகவின் திட்டத்தின் பிரகாரம், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழி நடாத்தலில், இன்று நுகேகொடை பொலிஸ் மைதானத்தில் காலை 8.00 மணிக்கு, இந்த 600 பேரும் ஒன்று திரட்டப்பட்டு உரிய சுகாதார நடைமுறைகளைக் கையாண்டு, தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வீடுகளுக்கு இ.பொ.ச. பஸ் வண்டிகளில் அனுப்பப்ட்டனர்.
அவர்களுக்கு காலை ஆகாரம், குடி நீர் வழங்கப்பட்ட பின்னரே அவ்வாறு அவர்கள் அனுப்பட்டனர். கர்ப்பிணிகள், சிறுவர்கள், நீண்ட நாள் உபாதைகளால் அவதியுறுவோர், சிறு பிள்ளைகள் உள்ள தாய்மார் உள்ளிட்டோர் இவ்வாறு சொந்த இடங்களுக்கு அனுப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.
இவ்வாறு அனுப்பட்ட அவர்கள் அனைவரும் உரிய பொலிஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கு சென்றதுடன், அங்கு அவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளட் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்கட்டினார்.
மிரிஹானை, மகரகம, பொரலஸ்கமுவ, வெல்லம்பிட்டிய, தலங்கம, வெலிக்கடை, நவகமுவ, முல்லேரியா, ஹோமாகம, கொட்டாவ, அத்துருகிரிய, பாதுக்க, ஹங்வெல்ல, கொத்தடுவ, மீபே ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தங்கியுள்ள 600 பேரே இன்று இவ்வாறு சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்துள்ள கணிப்பீட்டின் பிரகாரம், ஊரடங்கால் சிக்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர் 51,868 பேர் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் பொலிஸ் வலய மட்டத்தில் ஏனையோரையும் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment