நாட்டின் இயல்பு நிலை முற்றாக பாதித்திருக்கும் சூழ்நிலையில் தேர்தல் நடத்துவது குறித்து சிந்திக்க முடியாது இருப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தூதுக்குழு, தேர்தல் பற்றி இப்போதைக்கு அவசரப்பட வேண்டாமென தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றுக்காலை தேர்தல் ஆணைக்குழுவில் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அதன் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களது சட்டத்தரணியும் சந்தித்து தமது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் கட்சியின் செயலாளர் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்து மபண்டார கருத்து தெரிவிக்கையில், ஜூன் மாதம் 20ஆம் திகதி குறிப்பிடப்பட்டிருப்பது அரசியலமைபை முற்றிலும் மீறும் செயலென நாங்கள் கருதுகின்றோம்.
நாட்டில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியாமல் திடுதிப்பென்று தேர்தலுக்கான திகதியை அறிவிப்பது ஆரோக்கியமானதல்ல. தேர்தல் திகதியை தீர்மானிக்கும்போது அது குறித்து உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
கட்சிகளுக்கு எந்தவிதமான அறிவுருத்தள்களும் ஆலோசனைகளும் வழங்காமல் தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவித்திருப்பது அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என்றே நாங்கள் கருதுகின்றோம்.
எனவே இப்படியான சூழ்நிலையில் இந்த தேர்தலை அவசரப்பட்டு நடத்தாமல் தற்போது நாட்டில் நிலைகொண்டுள்ள நெருக்கடிகள் முழுமையாக நீங்கும் வரையிலும் இயல்பு நிலை வழமைக்கு திரும்பும் வரையிலும் தேர்தல் நடத்த முற்பட வேண்டாம் என்பதை வலியுறுத்தினோம் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே அரசியல் அமைப்பு ரீதியில் இங்கு ஒரு சட்டச் சிக்கல் ஏற்படுவது பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது அதனுடன் தான் தொடர்புபட்டவர் அல்ல என்று அவர் பதில் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment