கொரோனாவினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நாவிதன்வெளி பிரதேச சபை தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

கொரோனாவினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நாவிதன்வெளி பிரதேச சபை தீர்மானம்

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் நாவிதன்வெளி பிரதேசத்தில் வாழ்வாதாரத்தை இழந்த வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பிரதேச சபை நிதியை வகை மாற்றம் செய்வதற்கு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 26 வது மாதாந்த அமர்வு சபையின் பதில் தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட் தலைமையில் வியாழக்கிழமை (23) காலை 10 மணியளவில் சபையின் கூட்ட மண்டபத்தில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தொடரின் போது உறுப்பினர்களிடையே வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றது. இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை உறுப்பினர்கள் பதில் தவிசாளரிடம் முன்வைத்தனர். 

உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அவசர கால நிலைமையில் எமது நாடும் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. 
அந்த வகையில் எமது பிரதேசத்தில் கொவிட் -19 தொற்று பரவாமல் இருப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய பிரதேச சபை உறுப்பினர் பிரதேச மக்களுக்கு பல செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் உப தவிசாளர் அவசர கூட்டங்களை நடார்த்தி மக்களுக்கு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஆதங்கத்தினை வெளியிட்டனர்.

மேலும் நாவிதன்வெளி பிரதேசத்தில் கொரோனா அனத்தத்தினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பிரதேச சபை நிதியினை வகை மாற்றம் செய்வதற்கு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு தங்களது ஒரு மாத சம்பளத்தையும் நிவாரணமாக வழங்க சம்மதம் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் கொடிய வைரஸ்களை கட்டுப்படுத்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார பணிப்பாளர், முப்படையினர், வைத்தியர்கள், தாதியர்கள், அயராது பாடுபட்டு வருகின்றனர் அவர்களது சேவைக்கு உப தவிசாளர் பாராட்டினையும் நன்றியினையும் கூட்டத்தொடரின் போது தெரிவித்தார்.

மேலும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள காரணத்தினால் சுய விடுமுறையில் தேர்தல் முடியும் வரை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment