சம்மாந்துறையில் சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

சம்மாந்துறையில் சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை

பாறுக் ஷிஹான்

சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் (சலூன்' கடைகள்) அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டுமென சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் நாளை திங்கட்கிழமை (6) தளர்த்தப்படவுள்ள நிலையில், சம்மாந்துறை பிராந்தியத்தில் எவ்வாறான நடைமுறைகளை வியாபாரிகள் பின்பற்ற வேண்டுமென்ற கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (5) முற்பகல் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபைத்தவிசாளர் முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக், சம்மாந்துறை வைத்திய சாலை அத்தியாட்சகர் அஸாத் ஹனீபா, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.கபீர், பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கப்டன் நவரட்ண, பிரதேச வர்த்தக சம்மேளனத்தலைவர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சுகாதாரப்பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது குறித்த கலந்துரையாடலில் அனைத்துக்கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் போது, உரிய சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி வர்த்தகர்கள் செயற்பட வேண்டுமென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், ஏனைய ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்களை (சலூன்' கடைகள்) மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டுமென அங்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், இவ்வாறு திறக்கப்படும் வர்த்தக நிலையங்களுக்கும் வருகை தரும் நுகர்வோருக்கிடையிலும் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும், கை கழுவுதல், முகக்கவசம் அணிந்து கொண்டு வர வேண்டும், இவ்வுத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியிலிருந்து விளினையடிச்சந்தி வரையுமான பிரதான வீதியின் இரு மங்கிலும் எவ்வித காரணத்தையும் கொண்டும் நடைபாதை வியாபாரிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பத்தோடு, பிரதேசங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒவ்வொரு நடைபாதை வியாபாரிகளுக்குமிடையில் குறைந்து 50 மீட்டர் இடைவெளியினைப் பேண வேண்டும். மேலும், இதனை மீறுபவர்களுக்கெதிராக பொலிஸ், இராணுவத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்மாந்துறை பொதுச்சந்தையின் பலசரக்குக் கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் என்பன தவிர்ந்த ஏனைய சகல கடைகளும் மூடப்பட்டிருத்தல் வேண்டும். சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும்.

சகல சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்பாக கட்டாயம் கை கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கிடையிலான 01 மீற்றர் சமூக இடைவெளி பேணுவதற்காக வழி நடத்து ஆளனி ஏற்பாட்டினை உரிய வியாபார நிலையத்தின் உரிமையாளரினாலேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாத கடைகளுக்கெதிராக சுகாதாரப் பரிசோதகரினாலும் பொலிஸாரினாலும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்.
மக்களின் அத்தியாவசியத்தேவைகளைக் கருத்திற்கொண்டு நடமாடும் வியாபாரத்திற்காக அனுமதியளிக்கப்பட்ட வியாபாரிகள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடத்தவறும் பட்சத்தில், வியாபரத்திற்காக வழங்கப்பட்ட வெளிச்செல்லும் அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படுவதோடு, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத சகல வியாபாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்.

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவன்றி எவரும் வெளியிடங்களுக்கு வரவோ, பொருட்களைக் கொள்வனவு செய்யும் நோக்கில் வரும் பொது மக்கள் எக்காரணங்கொண்டும் சிறு பிள்ளைகளை அழைத்து வர வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

முடியுமானளவு வாகனங்களைத் தவிர்த்து நடையில் வருவதோடு, பிரதான பாதைகளில் வாகனங்கள் தரிக்கச்செய்து வீதி நெரிசலை ஏற்படுத்தாத வண்ணம் நடந்து கொள்ளுமாறு பொது மக்களைக் கேட்டுள்ளனர்.

இது தவிர, அம்பாரை மாவட்டத்தில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் நிர்ணய விலைத்தீர்மானம் ஏலவே எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிர்ணய விலையை மீறி விலைக்கட்டுப்பாடின்றி, விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களைச்சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கையெடுப்பதென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட அலுவலகப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment