ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தேவையான அரசியல் நிகழ்ச்சி நிரலையே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் முன்னெடுத்து வருகிறார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் நடத்துவதாக ஆளுங்கட்சியின் சில உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து தங்கள் நிலைப்பாடு என்னவென எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு கூறினார்.
“தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஹுல் என ஒரு உறுப்பினர் இருக்கிறார். அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கான அரசியலையே முழுமையாக முன்னெடுத்து வருகிறார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய சிறப்பாக செயற்படுகிறார். ஆனால், தேர்தலை வைக்க வேண்டாம் என சக உறுப்பினர் ஹுல் நீதிமன்றம் செல்கிறார். இதன் நோக்கம் என்ன?
தேர்தல்கள் ஆணைக்குழு என்பது சுயாதீனமாக இயங்க வேண்டும். மக்கள் பக்கம் நின்று, அரசியலமைப்பின் பிரகாரம் தீர்மானங்களை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment