கொரோனா வைரஸுக்கு சவாலாக நாட்டில் பொருளாதார வைரஸ் மக்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டு இருப்பதாகவும் இந்த சவாலை வெற்றி கொள்வதற்கு துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
நாட்டில் உள்ள வங்கிகளில் செயற்பாடுகள் நாட்டு மக்களுக்கு பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை உருவாக்கி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் பொருளாதார ரீதியில் சிலயோசனைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
அரசாங்கத்திற்கு கிடைப்பது ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் என்பதால் ஏற்கனவே நிறவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை ஊடாக பெறப்பட்ட நிதி தற்போதைய பிரச்சினைக்கு போதுமானதாக இல்லை. எனவே காலத்துக்கு ஏற்ற வித்தில் இடைக்கால கணக்கறிக்கையில் திருத்தம் செய்ய வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் அதன் அறிக்கையை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வெளியிட இருக்கின்றது. இதன்போது நாம் அவர்களிடமிருந்து கூடுமான அளவு ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நான் இவற்றை உங்களுக்கு சுட்டிக் காட்டுகின்றேன். ஒரு ஆரோக்கியமான திட்டத்தை நாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் ஐதே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று அரசாங்கத்துக்கு விடுத்த வேண்டுகோளில் அவர் இந்த விடயங்களை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
அண்மைக் காலமாக நாங்கள் எதிர்பாராத வகையில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக மோசமான நிலையை எட்டி இருப்பதால் அதிலிருந்து வெற்றி கொள்வதற்கு பிரயத்தனங்களை எடுத்துவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. எனவும் என்றாலும் கூட நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடிகளை அவசர தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டு இருக்கின்றனர்.
அவர்களுக்கு போதிய வருமானம் இன்றி முடங்கியிருப்பதனால் நாளாந்த செயற்பாடுகளைக் கூட முன்னெடுக்க முடியாத அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்ற போதிலும் அவை உரிய முறையில் அந்த மக்களை சென்றடைவதை காண முடியாத நிலையை எம்மால் அவதானிக்க முடிகிறது.
இப்படியான சூழ்நிலையில் நாட்டில் ஒரு பொருளாதார நெருக்கடியை தவிர்ப்பதற்கான ஏதாவது ஒரு வழியை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எம்.ஏ.எம். நிலாம், லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment