இலங்கையில் அடுத்துவரும் நாட்கள் மிக கடினமானதாக இருக்கும், புத்தாண்டு வரை எதிர்வுகூறல் ஒன்றினையும் முன்வைக்க முடியாது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

இலங்கையில் அடுத்துவரும் நாட்கள் மிக கடினமானதாக இருக்கும், புத்தாண்டு வரை எதிர்வுகூறல் ஒன்றினையும் முன்வைக்க முடியாது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

(ஆர்.யசி) 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுபடுத்த செய்ய வேண்டிய சகல நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறையினர் முன்னெடுத்தாலும் கூட அடுத்துவரும் நாட்கள் மிகவும் கடினமானதாக இருக்கின்ற காரணத்தினால் புத்தாண்டு வரையிலும் இலங்கையின் நிலைமையை சரியாக அறிவிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் எந்தளவு தூரம் நிலவும் என்பது குறித்து அறிவுறுத்துகையில் அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், இப்போது வரையிலும் இலங்கையில் கொரோனா தோற்றுப் பரவல் நிலைமைகளை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது என கூற முடியாது. நாளாந்தம் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமையில் அடுத்த ஒரு வார காலம் மிகவும் கடினமான வாரமாக அமையும். நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. 

அவ்வாறு இருக்கையில் எதிர்வரும் புத்தாண்டு வரையில் மிகக் கடினமான சுகாதார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. இறுக்கமான சட்ட திட்டங்களை பிறப்பித்து மக்களை கட்டுப்படுத்தி தொற்று நீக்கல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இலங்கையின் நிலைமை என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும். 

எவ்வாறு இருப்பினும் புத்தாண்டு காலம் வரையில் சரியான எதிர்வுகூறல் ஒன்றினை முன்வைப்பது கடினமானது. ஆகவே புத்தாண்டு காலம் வரையில் இப்போது நாட்டில் எவ்வாறான சட்ட திட்டங்களை பிறப்பித்து கட்டுப்பாடுகளை விதித்து நிலைமைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் மற்றும் சுகாதாரத்துறை செயற்படுகின்றதோ அதே நடைமுறைகளை தமிழ் சிங்கள புத்தாண்டு வரையில் அல்லது அதற்கும் பின்னரும் சில நாட்களுக்கு கடைப்பிடிக்க வேண்டும். 

அத்துடன் இப்போது வரையில் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்கள் எக்காரணம் கொண்டும் நடமாட வேண்டாம். அத்துடன் இந்த பகுதிகளில் தொற்று நோயாளர் இனங்காணப்படும் பட்சத்தில் உடனடியாக அவர்களை முகாம்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் வீடுகளில் இருக்கும் நபர்களுக்கு இந்த நோய் அடையாளம் இருப்பின் 1390 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும். மூன்று மொழிகளிலும் வைத்தியர்கள் தொடர்புகளை ஏற்படுத்துவார்கள். வைத்தியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் தெரிவித்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment