இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் தபால் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு மாநில அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
புவனேஸ்வரிலேயே அதிகாரிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர், புவனேஸ்வரின் பிஜேபி வீதியில் உள்ள தபாலகத்தில் பணி புரியும் ஒருவரிற்கே கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளது.
குறிப்பிட்ட நபர் சட்டத்தரணிகள், காவல்துறையினர் உட்பட பெருமளவானவர்கள் வசிக்கும் பகுதியில் தபால் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியா முடக்கப்பட்டுள்ள கடந்த பத்து நாட்களாக தபால் ஊழியர் பெருமளவு கடிதங்களையும் ஏனைய ஆவணங்களையும் விநியோகித்துள்ளார் என அந்த பகுதியின் காவல்துறை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் அவருடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தால் தயவு செய்து சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நோய் அறிகுறிகள் ஏதாவது காணப்பட்டால் உடனடியாக அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment