ஊரடங்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் பயங்கரவாதிகள் - ஐ.நா. பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

ஊரடங்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் பயங்கரவாதிகள் - ஐ.நா. பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கை பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் தலைமையகத்தில், இளைஞர்கள், சமாதானம், பாதுகாப்பு தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகமெங்கும் போடப்பட்டுள்ள ஊரடங்கை பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புணர்வை பரப்பவும், சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான பொழுதை கழிக்கின்ற இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற அமர்த்தவும் முயற்சிக்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதற்கு முன்பேகூட ஐந்தில் ஒரு இளைஞருக்கு சரியான கல்வி, பயிற்சி அல்லது வேலை கிடைப்பதில்லை. எனவே அவர்களில் நான்கில் ஒருவர், வன்முறையாலும், மோதலாலும் கவர்ந்து இழுக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் 1 கோடியே 20 லட்சம் பெண்கள், சிறுமிகளாக இருக்கிறன்போதே தாய்மை அடைகின்றனர்.

இவர்களின் விரக்தி, வெளிப்படையான தோல்விகள் போன்றவற்றுக்கு தீர்வு காண இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறி விட்டனர். இது ஆட்சியில் இருப்பவர்கள், அரசியல் நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைந்து போவதற்கு தீனியாக அமைகிறது.

அப்படி ஒரு சுழற்சி நடக்கிறபோது, இளைஞர்களின் கோபங்களையும், விரக்தியையும் பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள். அவர்களை பயங்கரவாதமயம் ஆக்குகிறார்கள்.

இந்த சவால்களுக்கு மத்தியிலும், ஒருவருக்கு ஒருவர் இளைஞர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். மாற்றத்துக்கு வித்திடுகிறார்கள். கொரோனா வைரசுக்கு எதிராகவும் போரிடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஒரு அறிக்கையும் அளித்தார். அந்த அறிக்கையில் “உலகில் 10 முதல் 24 வயது வரையிலான 185 கோடி இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் வளரும் நாடுகளிலும், மோதல் நடைபெறுகின்ற நாடுகளிலும் இருக்கின்றனர்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment