புதுடில்லி மசூதி மத நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவிற்கு புறப்படவிருந்த விமானத்திலிருந்து 8 மலேசிய பிரஜைகளை இந்தியா அதிகாரிகள் இறக்கியுள்ளனர்.
இந்தியாவில் சிக்குண்டிருந்த மலேசிய பிரஜைகளை அந்த நாட்டிற்கு அழைத்து செல்லவிருந்த மலின்டோ எயர் விமானச் சேவையின் விமானத்திலிருந்தே 8 மலேசிய பிரஜைகளை இந்திய குடிவரவு துறை அதிகாரிகள் இறக்கியுள்ளனர்.
புதுடில்லியிலிருந்து 30 மலேசிய பிரஜைகளுடன் புறப்படவிருந்த விமானத்திலிருந்தே மலேசிய பிரஜைகள் இறக்கப்பட்டுள்ளனர்.
புதுடில்லியின் நிஜாமூதின் மசூதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட வெளிநாட்டவர்களை கண்காணிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இந்திய தலைநகரில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துகொண்ட தென்னாபிரிக்க மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்க திரும்பிய 80 வயது மத குரு கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார் என அவரின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். யூசுவ் டுட்லா என்பவரே உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment