ஜா-எல, ஆணமடுவ கொரோனா தொற்றாளர்களால் பெரும் அச்சம் : ஒருகொடவத்தையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரால் 4 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு சிக்கல் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

ஜா-எல, ஆணமடுவ கொரோனா தொற்றாளர்களால் பெரும் அச்சம் : ஒருகொடவத்தையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரால் 4 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு சிக்கல்

(எம்.எப்.எம்.பஸீர்) 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இருவர் இன்று ஜா எல மற்றும் புத்தளம் - ஆணமடுவ பகுதிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களது தொடர்பாடல் வலையமைப்பைப்பால், அவ்விரு பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

ஜா எல பகுதியின் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் ஆணமடுவ - கிவ்ல பகுதி பெண்ணொருவருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் தொடர்பாடல் வலையமைப்பு மிக விசாலமானது என தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சுகாதார அதிகாரிகள் அது குறித்து ஆராய்ந்து வருவதுடன், தேவையான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுப்பர் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் ஆணமடுவ பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் கிவ்ல, புத்தளம் 9 ஆம் குருக்குத் தெரு ஆகியவற்றைச் சேர்ந்த 30 குடும்பங்கள் வரை தனிமைபப்டுத்தப்பட்டுள்ளன. 

29 வயதுடைய குறித்த பெண், ஆணமடுவ வைத்தியசாலையில் வேறு நோய் தொடர்பில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போதே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆணமடுவ ஆதார வைத்தியசாலையின் ஊழியர் படையனியில் பலரும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஆணமடுவ சுகாதார மருத்துவ பணிப்பாளர் தெரிவித்தார். 

இதனிடையே, ஜா எல - பமுனுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 25 வயது சந்தேக நபருக்கு கொரோன அவைரஸ் உள்ளமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள வைத்திய அறிக்கைக்கு அமைய ஜா எல - சுதுவெல்ல மற்றும் பாரிஸ் பெரேரா மாவத்தை ஆகிய பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. 

குறித்த இளைஞர் அப்பகுதியில் தோட்டம் ஒன்றில் தேங்காய் திருடும் நோக்கில், பலாத்காரமாக உள் நுழைந்துள்ளதாகவும், இதன்போது பிரதேச மக்கள் அவரை தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதனையடுத்தே அவருக்கு கொரோன இருப்பது உறுதியானதாகவும் பொலிசார் கூறினர். 

இந்நிலையிலேயே சுதுவெல்ல மற்றும் பாரிஸ் பெரேரா மாவத்தை ஆகியன முற்றாக முடக்கப்பட்டு அங்குள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பொலிஸாரும் தனிமைபப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம - அட்டுலுகம பகுதியின் மக்கள் அந்த கிராம எல்லையில் உள்ள ஆற்றைக் கடந்து வேறு பகுதிக்கு செல்வதாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய அந்த ஆற்றில் 24 மணி நேர கடற்படை கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. 

இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் பிரகாரம் இலங்கையில் மொத்தமாக 14 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. 

கம்பஹா மாவட்டத்தில் ஜா எல பகுதியில் இன்று திங்கட்கிழமை முடக்கப்பட்ட இரு பகுதிகளுக்கும் மேலதிகமாக யாழ். மாவட்டத்தின் அரியாலை - தாவடி பகுதியும், களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம மற்றும் பேருவளையின் சில பகுதிகள் கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியின் ஒரு பகுதி, கம்பஹா மாவட்டத்தின் கொச்சிக்கடை - போரத்தொட்டை, கொழும்பு மாவட்டத்தின் கிராண்பாஸ் பொலிஸ் பிரிவின் டி வாஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, ரத்மலானை - அர் ஜனமாவத்தை, குருணாகல் மாவட்டத்தின் - கட்டுபொத்தை - கெக்குனுகொல்ல பிரதேசத்தின் ஒரு பகுதி, மத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ - அக்குரஸ்ஸ - மாலிதுவ -கொஹூகொட பகுதி ஆகியனவே இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளாகும். 

இதனிடையே நேற்றுமுன்தினம் சனிக்கிழமை, மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக தகவல்களை மறைத்து ஆஜராகியுள்ள கொழும்பு ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்கிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்நிலையில் மஹரகம புற்று நோய் வைத்தியசாலையின் 4 வைத்தியர்கள் உட்பட 15 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் வசந்த திஸாநாயக்க கூறினார்.

No comments:

Post a Comment