(ஆர்.விதுஷா)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் யானைச் சின்னத்தில் ஒரே அணியில் போட்டியிடுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது குறித்து ஆராயவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் சஜித் அணியினர் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக தம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை நியமிக்குமாறு விடுத்திருக்கும் கோரிக்கைக்கு இடம்கொடுக்க தற்போதைய செயலாளர் உடன்படுவதாக தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சஜித் பிரரேமதாசவின் கூட்டணியினருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். ஏனெனில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் யாப்பில் காணப்படும் குறைபாடுகளின் காரணமாகவே இத்தகைய முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
ஆகவே, எமது கட்சியின் செயலாளர் பதவியை அவர்களுக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவருக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆகவே, இந்த பிரச்சினைக்கான தீர்வை கூடிய விரைவில் காண முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
அவ்வாறு இணைந்து செயற்படுவதன் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறும் வாய்ப்பு எமக்கு அதிகளவில் உள்ளது. கூட்டணியின் யாப்பு கட்சின் யாப்பை போன்று அமைந்துள்ளமையின் காரணமாகவும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. ஆகவே, கூட்டணியின் யாப்பில் மாற்றமேற்படும் பட்சத்தில் எம்மால் அவர்களுடன் இணைந்து பயணிக்ககக் கூடியதாகவிருக்கும்.
யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு சஜித் அணியினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எதிர்காலத்தில் பலமான கூட்டணியை உருவாக்கி அதன் ஊடாக ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்துவதே எமது இலக்காகும். இந்நிலையில், ஒன்றிணைந்து பயணிப்பதன் ஊடாக வெற்றி இலக்கை அடைவதே எமது எதிர்பார்ப்பாகும்.
கேள்வி: ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை துறக்க அகில விராஜ் காரியவசம் தயாராகவுள்ளாரா ?
பதில்: நிச்சயமாக தயாராகவுள்ளார். கட்சியின் ஐக்கியத்திற்காக தன்னுடைய பதவியை துறக்க அவர் தயாராகவுள்ளார்.
கேள்வி: மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே?
பதில்: அவருக்கும் மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கும் இடையில் எந்த வித தொடர்பும் இல்லை. பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் அறிக்கையில் அவருடைய பெயர் சுட்டிக்காட்டப்படவில்லை. மேலதிக விசாரணைகளை நீதிமன்றமே தீர்மானிக்க முடியும்.
No comments:
Post a Comment