இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும்

கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சர்வதேச ரீதியில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் இலங்கையிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அவதானத்துடன் செயற்படல் அவசியமானது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சர்வதேச ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள் பல கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. 

இவ்வாறிருக்க இலங்கை போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடு கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதென்பது சவாலான விடயமாகும். இதனால் ஏற்படும் ஆபத்துகள் தொடரக்கூடிய வாய்ப்பும் இருக்கின்றது. 

இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாட்டின் உற்பத்திகள் உள்ளிட்ட சகல விதமான வருமான வழிமுறைகளிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால், அனைவருமே நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. 

உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து அவதானமாக செயற்பட வேண்டிய தேவை உள்ளது. 

நாட்டின் அரசியல் தலைவர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்பு குறித்து செயற்படாமல் நாட்டின் நலன் குறித்து செயற்பட வேண்டும். 

இந்த வைரஸ் தாக்கத்திற்கான தீர்வு குறித்து அனைத்து அரசியல் தலைவர்களுக்குமிடையிலான கலந்துரையாடலோ, அல்லது பாராளுமன்ற கூடலோ தற்போது அவசியமாகவுள்ளது. 

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கல், பாடசாலை மற்றும் ஏனைய கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கல் போன்ற தீர்மானங்களை மேற்கொள்ளும் போது எல்லா கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி பல நாடுகள் வெற்றிகரமான தீர்வுகளைப் பெற்றுள்ளன. 

எனவே, இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தல் குறித்து விரைவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தலைவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment