வட்சப் மூலம் ஒன்றுகூடிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபை - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 17, 2020

வட்சப் மூலம் ஒன்றுகூடிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபை

வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் கொரோனாவிற்கு எதிரான எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதேச சபை உறுப்பினர்களுடன் ஓரிடத்தில் ஒன்று கூடாதவாறு தொலைபேசி மற்றும் வட்சப் மூலமாக கூட்டத்தினைக் கூடி ஆராய்ந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ். 

இது தொடர்பில் தவிசாளர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை தொடர்பாக பிரதேச சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் வலிகாமம் கிழக்கிற்கு உட்பட்ட அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தினர் ஆகியோருக்கு இடையில் தொலைத் தொடர்பு வசதிகள் (வட்சப்) ஊடாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 

இக்கலந்துரையாடலில் ஏற்கெனவே பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு விழிப்புணர்வு அறிவிப்புக்களைச் செய்வதற்கான வாகன வசதினை பிரதேச சபை செய்துள்ள நிலையில் நிலைமைகள் மோசமடையின் அது தொடர்பில் பிரதேச சபையின் வகிபாகத்திற்கு ஏற்ப உதவிகளைத் தாம் கோருவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி இந்துஜன் தெரிவித்தார். 

அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடனான கலந்துரையாடலில் சட்டம் ஒழுங்குகள் அறிவிப்புக்களின் பிரகாரம் பொது நிகழ்வுகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மக்களிடம் தவிசாளர் மக்கள் கூடுவதற்கான சகல நிகழ்வுகளையும் மட்டுப்படுத்துமாறு கோரியுள்ளார். 

கோப்பாய் பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி தவிசாளரிடையில் பிரச்சினைகள் இனங்காணப்படுமிடத்து ஒத்துழைப்பினைப் பெறுவது தொடர்பிலும் பேசப்பட்டது. 

மேலும் பிரதேச சபை உறுப்பினர்களால் இது சுகாதாரம் மற்றும் மருத்துவம் சார்ந்த பிரச்சினையாகவுள்ள நிலையில் பொதுச் சுகாதாரத் துறையினரால் கோரப்படும் உதவிகளை இடர்கால நிலைமையாக உடன் ஏற்படுத்துவதற்குத் தயார்ப்படுத்தல் பற்றிப் பேசப்பட்டது. 

மேலும் பிரதேச சபை உறுப்பினர்களால் மக்கள் தவிர்க்க முடியாது அத்தியவசியமாக வந்து செல்ல வேண்டிய இடங்களில் கைகழுவுவதற்கான பொது இடங்களைத் தயார்ப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. 

அத்துடன் அரசாங்கம் இடர் நிலையில் அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவதைப் பிரதேச சபை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தில் வட்டாரங்களில் வசிக்கின்ற சபை உறுப்பினர்கள் அவதானித்து தவிசாளரின் கவனத்திற்குக் கொண்டு வருவது பற்றியும் அது பற்றி உரியத் தரப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது பற்றியும் முடிவு எடுக்கப்பட்டது. 

தற்போதும் வீடுகளில் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. 

சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் தென்படுவோர் தயக்கமின்றி அரச மருத்துவ உதவியைப் பொறுவது சட்ட ரீதியான சமூகப் பொறுப்பு என்பதைச் சகலரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. 

இந்நிலைமையில் பிரச்சினைகள் இனங்காணப்படுமிடத்து தவிசாளர் உள்ளிட்ட குறித்த வட்டாரத்தில் செயற்படும் உறுப்பினர் நிலைமைகள் மீது அவதானிப்பினைச் செலுத்துவதற்கும் அவ் தரப்பினரின் தொடர்புகளை ஏற்படுத்தி உதவுவதற்கும் முடிவு எடுக்கப்பட்டது. 

மக்கள் இவ் அனர்த்த காலத்தில் தவிசாளர் என்ற வகையில் அவசரத்தில் பிரத்தியேக தொலைபேசி இலக்கமான 0776569959 அல்லது 0214339959 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி

No comments:

Post a Comment