எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்கும் நோக்குடன், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையினர் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில், கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பொது இடங்களில் தொற்று நீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
அந்த வகையில், கல்குடா பொலிஸ் நிலையம், வாழைச்சேனை பஸ் தரிப்பு நிலையம், பேத்தாழை பஸ் தரிப்பு நிலையம், பாசிக்குடா சுற்றுலா பிரதேசங்கள் மற்றும் சந்தைத் தொகுதி போன்ற பொது இடங்களில் இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித்தின் பணிப்பிற்கமைய இரசாயன திரவம் விசிறும் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டதோடு, வாழைச்சேனை சுகாதார வைத்திய அத்தியட்சகர் மற்றும் சுகாதார வைத்திய பரிசோதகர்களின் வழிகாட்டலில் இந்தச்செயற்றிட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள தையற்கடையின் உரிமையாளரான எம்.எம்.அரபாத்தினால் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரிடம் முகக் கவசங்கள் கையளிக்கப்பட்டது. இதனை கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளரினால் சபையின் எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று காரணமாக வர்த்தக நிலையங்களில் முகக் கவசங்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முகக் கவசங்கள் குறித்த வர்த்தகரினால் தவிசாளரிடம் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித்தினால் கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்கும் நோக்கில் செயற்படும் வண்ணம் பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களையும் வழங்கி வைத்தார்.
No comments:
Post a Comment