கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாலியில் பாராளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நேற்று தொடங்கியது.
ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012 ஆம் தொடங்கி தற்போது வரை உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக அங்கு பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு மார்ச் 29 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மாலி நாட்டிலும் நுழைந்தது. அந்த நாட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இதன் காரணமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சூழல் உருவானது. எனினும் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலும் திட்டமிட்டப்படி நேற்று தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.
பாதுகாப்பு அச்சுறுத்தலோடு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலும் இருப்பதால் வாக்கு பதிவு மிகவும் மந்தமாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகின்ற 19 ஆம் திகதி 2 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment