கூலித் தொழிலில் ஈடுபடுவோருக்கான நிவாரணங்கள் வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

கூலித் தொழிலில் ஈடுபடுவோருக்கான நிவாரணங்கள் வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர

(எம்.மனோசித்ரா) 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்குத் தேவையான பொருட்கள் பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதோடு நாடளாவிய ரீதியில் தினக் கூலியில் ஈடுபடுபவர்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமயில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போதே சு.க. இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. எனினும் அது பாரியதொரு பிரச்சினையல்ல. 

ஐ.டி.எச் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளில் முகக் கவசங்கள் மற்றும் சிகிச்சையின் போது அணியும் ஆடை என்பன பற்றாக்குறையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கொரோனா தொற்றாளர்கள் அல்லது சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது மேற்குறிப்பிட்டவை அத்தியாவசியமானவையாகும். எனவே முதலில் அவற்றை போதியளவு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

மேலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினக் கூலி தொழிலாளர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சகல கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் இவ்வாறானவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரணத்தை துரிதமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். 

இவ்வாறு நிவாரணங்களை வழங்குவதற்கும் கொரோனா ஒழிப்பிற்கான ஏனைய நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment