அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் செய்த அவமதிப்புக்கு வெளிப்படையான ஒரு பதிலடியாக செவ்வாய்யன்று விடுத்த அறிவிப்பில் சீன அரசாங்கம் கொரோனாவை சீன வைரஸ் என்றோ அல்லது வூஹான் வைரஸ் என்றோ வர்ணிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்றும் அத்தகைய குறுகிய மனப்பான்மையுடனான வர்ணனை அந்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச ஒத்துழைப்புக்கு ஊறுவிழைவிப்பதாக அமையும் என்றும் கூறியிருக்கிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் செவ்வாயன்று நடத்திய தொலைபேசி சம்பாஷணையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி கொரோனா வைரஸை சீனாவுடன் அடையாளப்படுத்தி வர்ணிப்பதை இந்தியா ஏதிர்க்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
கொரோனாவை வூஹான் வைரஸ் என்றோ சீனா வைரஸ் என்றோ வர்ணிக்கக்கூடாது என்று புதுடில்லி இணங்கிக் கொண்டுள்ளது. இத்தகைய வர்ணனைகளுக்கு எதிராக கடுமையான கண்டனத்தை சர்வதேச சமூகம் வெளிப்படுத்தி சீனாவுடனான ஒருமைப்பாட்டை உறுதிசெய்ய வேண்டும் என்று சீனா கூறியிருக்கிறது.
சீன வெளியுறவு அமைச்சருடன் தான் நடத்திய சம்பாஷணை குறித்து ருவிட்டரில் பதிவொன்றைச் செய்திருக்கும் ஜெய்சங்கர் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து பேசியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
சம்பாஷணையின்போது வாங் ஜி கொவிட்-19 க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு சீனா அதன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
வைரஸுக்கு எதிரான போராட்டத்தின் தனது அனுபவத்தை சீனா இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராயிருப்பதுடன் அதன் ஆற்றலுக்குட்பட்ட முறையில் உதவிகளையும் வழங்கும் என்றும் வாங் ஜி கூறினார்.
ஜெய்சங்கர் பதிலுக்கு இந்திய அரசாங்கத்தின் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment