(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது காணப்படும் நெருக்கடியான சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே ஒரு வார காலத்திற்குள் பெருந்தோட்டத் மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இவ்விடயம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகபக்கத்தில் விசேட காணொளி பதிவொன்றினை பதிவு செய்திருக்கும் அமைச்சர் அதில் மேலும் கூறியதாவது,
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்களின் ஒத்துழைப்பின்றி அதனைக் கட்டுப்படுத்துவது கடினமாகும்.
திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்ட போது மலையத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் சிறுவர்கள், குழந்தைகளுடன் விற்பனை நிலையங்களுக்கு வந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பெருந்தோட்டப் பகுதிகளில் பனி மற்றும் வெப்ப காலநிலை காரணமாக தொழிலாளர்களின் வேலை நாட்கள் ஏற்கனவே குறைக்கப்பட்டிருந்தன. பின்னர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது மேலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.
எனவே இதன் காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கான நிவாரணம் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்வின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளால் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ஒரு வார காலத்திற்குள் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அத்தோடு நிவாரணங்கள் மாத்திரமின்றி ஏற்கனவே கூரிய படி 1000 ரூபாய் நாளாந்த சம்பளமும் வழங்கப்படும். இவற்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை இலங்கை தொழிலாளர் காங்ரசுக்கு இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment