என்னிடம் எந்தவித அரசியல் நோக்கமும் கிடையாது. மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதும் அவர்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதுமே என்னுடைய நோக்கமாகும். குறிப்பாக, மத்திய கொழும்பு வாழ் மாணவர்களின் கல்விப் பிரச்சினைகளை அறிந்து, அது தொடர்பில் தேவையான முழு அளவிலான முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுப்பதே எனது பிரதான குறிக்கோளாகும் என்று ஜனாதிபதி சட்டத்தரனியும், பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பு 12, ஹமீத் அல் ஹுஸைனி தேசிய பாடசாலையின் வருடாந்த மாணவர் சாதனையாளர் தினம், பாடசாலை மண்டபத்தில் அதிபர் ஏ.கே.பி. அதஹான் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மபாஸ் மொஹிதீன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பதிதிகளாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் மொஹமட் உவைஸ், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சீதா எதிரிசிங்க உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பைஸர் முஸ்தபா எம்.பி. தொடர்ந்தும் கருத்துரை வழங்கும்போது, ஹமீத் அல் ஹுஸைனி, மிகப்பழமை மிக்க பாடசாலை மாத்திரமல்ல, மிகத்திறமை மிக்க பாடசாலையாக இயங்கி வருவதையிட்டும் நான் பெரு மகிழ்வடைகின்றேன். இப்பாடசாலை வரலாறு படைத்து சாதனைகள் பல புரிந்துள்ளன. பழைய மாணவர்களைப் போல், தற்போது இங்கு கற்கும் மாணவர்களும் திறமை மிக்கவர்களாக உள்ளனர். இவர்களின் அபார ஆற்றல்களை நான் மெச்சுகிறேன்.
ஒவ்வொரு மாணவரும் கல்வியில் தேர்ச்சி பெறவேண்டும். சாதனை படைக்க வேண்டும். சிறந்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். எதனையும் செய்யவேண்டும் என்ற துணிவு வரவேண்டும். ஒரு டாக்டராகவோ, பொறியியலாளராகவோ அல்லது வேறு அரசியல் துறைகளிலோ இம்மாணவர்கள் வரவேண்டும் என்பதே எனது ஆசை. இதனால்தான், எந்தவித அரசியல் நோக்கங்களையும் கருதாது, மாணவர்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முன்வந்துள்ளேன். விசேடமாக, மத்திய கொழும்பு வாழ் மாணவர்களுக்கு இதனைத் தொடராக செவ்வனே நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளேன் என்றார்.
இதன்போது, பைஸர் முஸ்தபாவினால் சான்றிதழ்களும் விளையாட்டு உபகரணங்களும் அத்துடன், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
ஐ.ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment