கூட்டமைப்பும், கூட்டணியும் நட்பு கட்சிகள் என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தும் - வேலு குமார் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

கூட்டமைப்பும், கூட்டணியும் நட்பு கட்சிகள் என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தும் - வேலு குமார் எம்.பி

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் பகைமை கட்சிகள் அல்ல. இரண்டும் நட்பு கட்சிகள். எங்களுக்கு இடையில் இருக்கக்கூடிய ஒரு சில முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள். அவை பகைமை முரண்பாடுகள் அல்ல. எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேருதல் என்பது நல்ல ஒரு கனவு. ஆனால், நடைமுறை சிக்கல்கள், வடக்கு-தெற்கு அரசியல் கள நிலவரங்கள், அரசு-எதிரணி முரண்பாடுகள் காரணமாக எல்லா தமிழ் கட்சிகளும் ஒரே அணியாக ஒன்று சேர முடியாது. ஆகையால் எங்கெங்கே ஒருமித்து செயற்பட முடியுமோ, அங்கெல்லாம் நாம் ஒருமித்து செயற்படலாம். கூட்டமைப்புக்குள் மூன்று கட்சிகளும், கூட்டணிக்குள் மூன்று கட்சிகளும் உள்ளன. இந்நிலையில் நாம் ஒன்று சேர்ந்து செயற்பட்டால், பிரதான ஆறு தமிழ் கட்சிகள் இயன்ற மட்டங்களில் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றன என்று அர்த்தமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி பிரதி தலைவர் கண்டி மாவட்ட எம்.பி வேலுகுமார் கூறியுள்ளார். 

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானத்தின்படி வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் போட்டியிடுவதானால், அது தொடர்பில் எமது ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அவர்களுடன் பேசி தீர்மானிப்போம் என கூட்டமைப்பின் பேச்சாளரும், தமிழரசு கட்சியின் பிரமுகருமான சுமந்திரன் எம்.பி கூறியுள்ளமை தொடர்பில் மேலும் வேலுகுமார் எம்.பி கூறியுள்ளதாவது,

வடக்கு கிழக்கு மாகாணங்களின் சில மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் நாமும் ஆலோசித்து வருகிறோம். அதேபோல் கூட்டமைப்பும் சில தென்னிலங்கை மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசிக்கிறது. இந்த பரஸ்பர போட்டி, தமிழ் வாக்குகளை சிதைத்து விடக்கூடாது என்பதில் இரு சாராரும் கவனமாக இருக்கின்றோம். எனவே எந்த அடிப்படையில் நாம் புரிந்துணர்வுடன் செயற்படுவது என நமது இரண்டு அணிகள் மத்தியில் பேச்சுகள் இடம்பெறலாம். இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி, எமது தலைவர் மனோ கணேசனுடன் தொடர்புகொண்டுள்ளார். இன்னமும் சில தினங்களில் இந்த பேச்சுகள் இடம்பெறலாம்.

No comments:

Post a Comment