இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை : பிரித்தானியா, சுவிஸ், கனடாவில் செயற்பாடுகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை : பிரித்தானியா, சுவிஸ், கனடாவில் செயற்பாடுகள் ஆரம்பம்

(ஆர்.ராம்) 

இலங்கை அரசாங்கத்தினை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புக்களின் ஒருங்கிணைந்து தீவிரமாக முன்னெடுத்துள்ளன. 

பிரித்தானியா, சுவிஸ், கனடா ஆகிய நாடுகளில் உள்ள சட்டவல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் முதற்கட்ட பொறிமுறைகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பினை நாளை ஆரம்பமாகும் 43 ஆவது கூட்டத் தொடரில் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளது. 

இந்நிலையில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூற வைக்கும் செயற்பாட்டினை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினுள் மட்டுப்படுத்தி வைப்பதானால் எவ்விதமான பயனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிட்டப்போவதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு மேற்படி புலம்பெயர் அமைப்புக்கள் வந்துள்ளன. 

இந்நிலையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் செய்வதற்குரிய அழுத்தங்களை வழங்குவதற்கு போதிய அதிகாரம் ஜெனீவா அரங்கிற்கு காணப்படாமையினால் இலங்கை விவகாரத்தினை மனித உரிமைகள் பேரவையினுள் முடக்குவதானது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைப்பதற்கு தொடர்ந்தும் தாமதங்களே நீடிக்கும் சூழலையே ஏற்படுத்தும் என்பதன் காரணமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றின் முன் நிறுத்துவதற்கு முயற்சிகளை அப்புலம்பெயர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து எடுத்திருந்தன. 

எனினும் பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்ற பட்சத்தில் இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த முடியும் என்ற முதலாவது முறைமை ஆராயப்பட்டபோதும் அதற்கு வீட்டோ அங்கீகாரத்தினைக் கொண்டிருக்கும் சீனா, ரஷ்யா இலங்கை அரசின் சார்பாக தீர்மானங்களை எடுக்கின்றபோது அம்முயற்சிகள் வெற்றியளிக்காது என்று கருதி கைவிடப்பட்டது. 

அடுத்து, ரோஹிங்கியா விவகாரத்தில் மியன்மாருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றின் முன் சாட்சியங்களுடன் அவ்விடயத்தினை கம்பியா நாடு முன்மொழிந்தமையை பின்பற்றி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களின் சாட்சியங்களை திரட்டி சர்வதேச நாடொன்றின் மூலமாக குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்வது பற்றி ஆராயப்பட்டது. 

எனினும் அந்த செயற்பாடு உடனடியாகச் சாத்தியமாகாதபோதும் அம்முயற்சிகளை தொடர்வதென அப்புலம்பெயர் அமைப்புக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறுதியாக, பொது வழக்கறிஞர் ஒருவர் ஊடாக குற்றவியல் நீதிமன்றத்தினை நாடுவதற்குரிய நடவடிக்கைள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

சுமார் இரண்டு மாத காலத்திற்கு முன்னதாக பொது வழக்கறிஞர் ஒருவர் ஊடாக இலங்கை விடயத்தினை நகர்த்தவது தொடர்பில் கனடா, சுவிஸ் மற்றும் பிரித்தானியாவில் உள்ள சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளீர்த்து பொறிமுறைகளை தயாரிக்கும் செயற்பாடுகளை குறித்த புலம்பெயர் அமைப்புக்கள் முன்னெடுத்த வண்ணமுள்ளன. 

அத்துடன் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமைகள், மனிதாபிமாச்சட்ட மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இன அழிப்பு போன்றவற்றுக்கான சான்றுகளையும் சேகரிக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ள இப்புலம்பெயர் அமைப்புக்கள் குற்றவியல் நீதிமன்றை நாடும்போது தமது மனுத்தாக்கலுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவே இந்த செயற்பாட்டினை கையிலெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. 

இதேவேளை, வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உட்பட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைக் கோரும் செயற்பாட்டில் பங்கேற்றுவரும் அனைத்து தரப்புக்களும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதற்கு புலம்பெயர் அமைப்புக்களால் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு வலுச்சேர்ப்பதோடு பொதுவான வேலைத்திட்ட பொறிமுறையில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார். 

இந்த விடயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களை மையப்படுத்தி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளதோடு தற்போதைய சூழலில் இலங்கை அரசாங்கத்தினை கையாள்வதற்கு இதனை விட வேறொரு வழி இல்லையென்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவருடைய கட்சியுடன் இணைந்து பணியாற்றும் புலம்பெயர் அமைப்புக்களும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதற்கான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment