மாற்று அணி தொடர்பில் கூட்டமைப்பு கருத்து கூற மறுப்பு - பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை - மாவை - News View

About Us

About Us

Breaking

Sunday, February 23, 2020

மாற்று அணி தொடர்பில் கூட்டமைப்பு கருத்து கூற மறுப்பு - பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை - மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 

யாழிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று(22) சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும். அதுவே பலரதும் கோரிக்கையாகவும் இருக்கின்றது. ஆகையினால் அதனைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென வலிறுத்தி மன்னாரில் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் யாழில் நேற்று (22) நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போது கட்சியைப் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்ட்டது. 

இந்த ஊடக சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன், பேச்சாளர் எம்.ஏ,சுமந்திரன். தமிழரசு தலைவர் மாவை சேனாதிராசா, தமிழரசு செயலாளர் துரைராஐசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்த போதும் இந்தக் கேள்விக்கு உரிய பதில்களை வழங்க மறுத்துவிட்டனர். 

குறிப்பாக இந்த ஊடக சந்திப்பை வேறு நோக்கத்திற்காக நடாத்துகின்றோம் என சம்பந்தன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்தக் கேள்வியை விடுத்து வேறு கேள்வியைக் கேளுங்கள் அதைப்பற்றிப் பேசுவோம் என சுமந்திரன் தெரிவித்தார். 

ஆனாலும் இதன் போது கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா அதற்கான அவசியம் இப்போது ஏற்படவில்லை என்றும் பங்காளிக் கட்சிகளோடு சேர்ந்து அவர்களுடன் பேசித் தான் இந்த இயக்கத்தை நடாத்துகின்றோம் என் தெரிவித்திருந்தார். 

இதேவேளை தேர்தலொன்று நெருங்கி வருகின்ற நேரத்தில் தமிழ்க் கட்சிகளிடையே ஏற்படும் பிளவுகள் மற்றும் புதிய கூட்டணிகள் குறித்து எழுப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து விட்டனர். 

குறிப்பாக தேர்தல் சம்மந்தமான கேள்விகள் வேண்டாம். தேர்தல் இன்னும் அறிவிக்கவில்லை. அதனை அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளுவோம் என பேச்சாளர் சுமந்திரன் கூறி ஊடக சந்திப்பை முடித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment