சிறந்த ஆயுதங்களை பெறுவதற்காக 109 மில்லியன் டொலர் கடனுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி எல் சால்வடோர் பாராளுமன்றத்தை அந்நாட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
ஜனாதிபதி நயிப் புகேலே எம்.பிக்களிடம் உரை நிகழ்த்தும்போதே படையினர் பாராளுமன்றத்திற்கு நுழைந்துள்ளனர். இந்தக் கடன் திட்டத்தை அங்கீகரிப்பதற்கு ஏழு நாள் கால அவகாசத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
படையினர் பாராளுமன்றத்திற்கு நுழைந்தது முன்னெப்போதும் நிகழாத ஒரு மிரட்டல் செயல் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
உலகில் அதிக கொலைச் சம்பவம் பதிவாகும் நாடுகளில் ஒன்றாக எல் சால்வடோர் உள்ளது. நாடெங்கும் உள்ள குற்ற கும்பல்களால் இவ்வாறான கொலைகள் பதிவாகின்றன.
கடந்த 2019 ஜுன் மாதம் ஜனாதிபதியாக பதவி ஏற்ற புகேலே, குற்ற கும்பல்களின் வன்முறைகள் மற்றும் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். படையினருக்கு சிறந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குதற்காக கடன் பெறும் திட்டத்தை அவர் அறிமுகம் செய்திருந்தார்.
38 வயதான ஜனாதிபதி நைப் இந்த கடன் தொகையைக் கொண்டு பொலிஸாருக்கும் ராணுவ வீரர்களுக்கும் ஆயுதங்கள் அளித்து குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விரும்புகிறார்.
குறிப்பாக காவல்துறை வாகனங்கள், சீருடை, கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஹெலிகொப்டர் ஆகியவை வாங்க இந்த தொகையை பயன்படுத்த வேண்டும் என்று அவர் எண்ணுகிறார்.
ஆனால், இந்த முடிவை செயல்படுத்த வகை செய்யும் பிரேரணை மீது கடந்த வாரம் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்க போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தனர்.
பிரேரணையை நிறைவேற்ற முடியாமல் போனதால், ஜனாதிபதி நைப் தனது ஆதரவாளர்களை போராட்டத்தில் இறங்குமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் சுமார் 50 ஆயிரம் பேர் அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நைபின் இந்த செயல் மிரட்டல் விடுப்பதுபோல் இருப்பதாகவும், அவர் எதேச்சதிகாரத்தை நோக்கி செல்வதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment