வெளிநாட்டு சக்திகளுக்கு நமது அரசியல் தலைமைகள் துணைபோனதாலேயே, முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக நோக்கும் நிலை ஏற்பட்டதாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.
பள்ளிக்குடியிருப்பு அதாவுல்லா விளையாட்டரங்கில் அதிபர் எம்.ஏ.ஏ.இஸ்ஸடீன் தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
எமது நாட்டில் இனவாதங்கள் விதைக்கப்படுகின்றன. மக்களின் தேவைக்காகவன்றி நாட்டை அடிமைப்படுத்தும் நோக்கிலே, இவ்வாறு சிலர் செயற்படுகின்றனர்.
சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற இனவிரிசல்களை ஏற்படுத்தி பிரச்சினைகளை உருவாக்கினால் அவர்களது ஆயுதங்களை விற்க முடியுமென இச்சக்திகள் நினைக்கின்றன. பிரச்சினைகள் உள்ள நாடுகளில் இலகுவாக காலூன்ற முடியும் என நினைக்கும் ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகளை எமது தலைமைகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
இதனால் அவர்களால் தீட்டப்படும் சதிவலைகளுக்குள் தொடர்ந்தும் இத்தலைமைகள் சிக்கிக் கொள்கின்றன. இதனால் சமாதானத்தையே விரும்பி, தேசப்பற்றையே நேசித்து வந்த எமது முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகத்தினரால் பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படும் நிலைமைகளும் ஏற்பட்டதை நாம் மறக்க முடியாது.
இந்தச் சூழ்ச்சிகளைத் தோற்கடிப்பதற்கு நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டுக்கு பாதுகாப்பு முக்கியமானது தேர்தல் வெற்றியின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் பதவி ஏற்றபின்பு நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகல சமூகங்களும் மத வேறுபாடுகளை மறந்து ஐக்கியமாகக் கொண்டாடும் தினமாக சுதந்திர தினமே உள்ளது.
எனவே இலங்கையர் என்ற உணர்வை சகல மக்களும் வெளிப்படுத்த, ஒன்று சேர்வது இன்றியமையாதது. நாட்டுபற்று, தேசப்பற்றுள்ள மாணவர்களாக, தலைவர்களாக ஆசிரியர்களாக, அதிபர்களாக, பொதுமக்களாக இருப்பதே காலத்தின் தேவையாகும். எமது தாய் நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம், கிறிஸ்தவம் என்று மட்டுப்படத்தப்பட்டதல்ல என்றார்.
அக்கரைப்பற்று நிருபர்
No comments:
Post a Comment