எஸ்.எம்.எம்.முர்ஷித்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்றத்திற்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்கள் தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு மும்முரமாக நடைபெற்றது.
கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தலைமையில் செயலகத்தில் இடம்பெற்றது. ஒருவரை தெரிவு செய்வதற்கு நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 3274 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அத்தோடு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் செயலகத்தில் இடம்பெற்றது. ஒருவரை தெரிவு செய்வதற்கு மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 2015 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்றத்திற்கான வாக்களிப்பு நிகழ்வில் செயலக இளைஞர் சேவை அதிகாரிகளான எஸ்.ஐ.எம்.பசீல், வி.தர்மரெத்தினம் மற்றும் செயலக உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதின்நான்கு பிரதேச செயலகங்களைச் சேர்ந்த முன்னூற்று நாற்பத்து ஐந்து கிராம சேவகர் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இளைஞர் கழகங்களைச் சார்ந்த இளைஞர் யுவதிகளும் இத்தே்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
அதேவேளை இளைஞர் கழகங்களுக்கான வயதெல்லை 15 முதல் 29 வயதிற்குட்பட்ட கழக உறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி வாய்ந்தவர்களாக கருதப்படுவர். இத்தேர்தலில் 18 முதல் 29 வரையான சகல மாவட்டத்தின் சகல இளைஞர்களும் வாக்களிப்பதற்கு தகுதி வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கென 1979 ஆம் ஆண்டு ஒன்பதாம் இலக்க இளைஞர் சேவைகள் சட்டத்தின் நோக்கங்களை அடைதல் எனும் சட்டத்திற்கூடாக இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பானது நிதி மற்றும் நியாயமான ஒரு சமூகத்தின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து குடிமக்களுக்கு கல்வி கற்பித்தல் தேசிய சர்வதேச பொருளாதார சமூக அரசியல் கலாசார சூழலினை சரியான முறையில் பேணுவதற்கான ஒரு ஆளுமைமிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலே இச்செயற்பாடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 2020 ஆம் ஆண்டு இளைஞர் பாராளுமன்றத்தில் 356 பிரதிநிதிகள் இப்பாரளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். இதில் பிரதமர், சபாநாயகர், துறைகளுக்கான அமைச்சுப் பதவிகளும் இப்பிரதிநிதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டோர்களுக்கு பதவிகள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment