1947ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பான வரலாறுகள் அடங்கிய புத்தகமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று (24) கையளித்தது.
இது தொடர்பான நிகழ்வு பாராளுமன்றத்தில் நடைபெற்றதுடன், 70 வருட கால பாராளுமன்ற தேர்தல்கள் பற்றிய தகவல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, தேர்தல்களைக் கண்காணிப்பதற்கு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதுடன், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரியப்படுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கைவிடுத்தார்.
நீதியான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு ஊடகங்கள் சுயாதீனமாகவும், நடுநிலையாகவும் செயற்படுவதற்கான நடவடிக்கை எடுப்பது பற்றியும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும், பதவியனி தலைமையதிகாரியுமான நீல் இத்தவெல ஆகியோரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment